Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பாரதி

பாரதி உள்ளம்

சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் - அந்த
இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை - நான்
இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல
பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்
நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை - இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்
நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி
வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.
மகா கவி

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தௌிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே"யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.

"சாதிகளே இல்லையடி பாப்பா" என்றார்
"தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்" என்றார்.
சோதிக்கின் "சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி"பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்" என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் "ரா.கி" (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல
என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...