Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 23 ஜனவரி, 2010

மெட்டுப்போடு



மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனையெத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

இது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

இனி கண்ணீர் வேண்டாம் புதுக்கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க

கண்ணதாசன் மறைந்தபோது வாலி எழுதிய இரங்கல் கவிதை



கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
Related Posts Plugin for WordPress, Blogger...