Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்





படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்.rar

புதன், 10 பிப்ரவரி, 2010

சின்னஞ்சிறு கிளியே .



சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னை கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளை கனியமுதே, - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே - என் முன்னே
ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளம் குளிரு தடி!
ஆடிதிரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடி!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடி!
மெச்சி உன்னை ஊரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடி!
உன்னை தழுவிடில - கன்னமா
உன்மத்த மாகு தடி!

சற்று முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடி!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடி!

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடி!
என் கண்ணில் பார்வயன்றோ? - கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்:
முல்லை சிரிப்பாலே - எனது
மூர்க்கம் தவிர்த்திடு வாய்.

இன்ப கதைகள் எல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ ?
அன்பு தருவதிலே - உன்னைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிகள் லுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ?

சுட்டும் விழி சுடர்





சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்கலடி

சோலை மலர் ஒலியோ - உனது
சுந்தரபுன்னகை தான்

நீல கடலலையே - உனது
நெஞ்சின் அலைகளடி

கோலக் குயில் ஒஅசை - உனது
குரலின் இனிமையடி

வாழை குமரியடி - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக்கடி

ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோஅடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்

காதிருப்பெநோஅடி - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தீர்த்தக் கரையினிலே... (கண்ணம்மா - என் காதலி)



....வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

வந்தே...


ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே

வந்தே...

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
வந்தே...

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
வந்தே...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
வந்தே...

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

வந்தே...

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
வந்தே...

புதுமைப் பெண்

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!

முரசு



வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.

வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.

ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.

சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.

வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?

தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

பாப்பாப் பாட்டு


ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!

மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

சென்றது மீளாது

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

கடமை அறிவோம்

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.

மாயையைப் பழித்தல்

ராகம்-காம்போதி தாளம்-ஆதி உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

மனப் பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.

சரணங்கள்

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி
ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்
கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)

கண்ணம்மாவின் காதல்



காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக் (காற்று வெளி)

வெற்றி

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.

மஹா சக்தி

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

பேதை நெஞ்சே!

இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!

நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!

சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே!

பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே!

சக்தி

துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி;
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.


வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,
மாநிலம் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி.

ஓம் சக்தி

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!
Related Posts Plugin for WordPress, Blogger...