Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

சனி, 13 பிப்ரவரி, 2010

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே ஒரு
தேள்வந்து கொட்டுது காதினிலே - எங்கள்
மந்திரி மார்என்ற பேச்சினிலே - கடல்
மண்ணும் சிரிக்குது 'பீச்' சினிலே!

குழந்தையைக் கொல்லும் தமிழ்நாடு - பசி
கொள்கை படைத்த தமிழ்நாடு - வெறும்
இலந்தைப் பழந்தின்று வாழ்வதிலே - ஒரு
ஈடிணை யற்ற தமிழ்நாடு!

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி - என
மேவிய ஆறு' பலவினிலும் - உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!

நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய்யும் குமரிகளே - வட
மாலவன் குன்றம் தனில்ஏறி தலை
மழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!

கல்வி சிறந்த தமிழ்நாடு - காம
ராசா பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே - வரப்
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு - கொலை
கொள்ளை யெனும்மிக நல்ல தொழில்களைக்
குறைவறச் செய்யும் எழில்நாடு!

சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி - அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே - கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலை இமயம் எனும்
வெற்பை இடிக்கும் திறனுடையார் - தினம்
தொன்னை பிடித்துத் தெருவினிலே - நல்ல
சோற்றுக் கலையும் புகழ்நாடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...