Album (13) audio (20) karaoke (1) nolyrics (8) novideo (181) poem (39) video (264)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரின் நீரும் இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர். பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும் குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும் குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் விழைகுவ னேனும் தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர். பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் பக்கத் துறவின் முறையார் தயைமிக உடையாள் அன்னை - எனனைச் சந்ததம் மறவாத் தந்தை குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை அயலவ ராகும் வண்ணம் = தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர். நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே நிறையக் குளிர்வெண் ணிலவாம் காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம் மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல மலைகளின் இன்பக் காட்சி மேலென எழுதும் கவிஞர் - தமிழின் விந்தையை எழுதத் தரமோ? செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் தேக்கிய கறியின் வகையும் தன்னிகர் தானியம் மூதிரை - கட்டித் தயிரோடு மிளகின் சாறும் நன்மதுரஞ் செய் கிழங்கு - கானில் நாவிலினித்திடும் அப்பம் உன்னை வளர்ப்பன தமிழா, உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்..! இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..!

Related Posts Plugin for WordPress, Blogger...